கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகதுணை முதல்வர் , ஓபிஎஸ்ஆலோசனை

சென்னை:


கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்து துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் தனது துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர்-செயலர் முனைவர் த.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் ப. முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அவர்களுடன், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,


சென்னை கோயம்பேடு சந்தையில், மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகள், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் வாடிக்கையாளர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.


கோயம்பேடு வணிகவளாக அங்காடியின் வெளிப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, வாகனங்கள் நுழையும் நுழைவாயில்கள் மற்றும் வெளிவாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.


மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டயாமாக்குவதற்காக தினந்தோறும் 5000-க்கு மேற்பட்ட முகக் கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 50000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு விலையின்றி வழங்கப்பட்டுள்ளன.


அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தானியங்கி பறக்கும் இயந்திரத்தின் மூலம் கோயம்பேடு வணிகவளாக அங்காடியின் உள்பகுதிகளிலும் கிருமி நாசினி தினமும் தெளிக்கப்பட்டு வருகின்றது.


சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுக்கள் வரவழைக்கப்பட்டு, காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டுவரும் வாகனங்களின் ஓட்டுனர், நடத்துனர் முதல் கோயம்பேடு வணிக வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் / வாடிக்கையாளர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.


கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி வளாகம் மற்றும் உணவு தானிய அங்காடி வளாகங்களில், அவ்வப்போது சேரும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


சுகாதாரப்பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் மற்றும் அங்காடிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காகவும் கூடுதல் பணியாளர்களை அமர்த்துமாறு ஒப்பந்தக்காரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்றை தடுக்கும் பணிகள் தினமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.


துணை முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி கோயம்பேடு மொத்த வணிகவளாக அங்காடியில் அதிக பொதுமக்கள் வரத்துக்கொண்ட 10 நுழைவாயில்கள் கண்டறியப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் ரூ 17.0 இலட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் 'Tunnel Sprayer ' அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களிலுள்ள, அதிக மக்கள் வசிக்கின்ற 305 திட்டப்பகுதிகளில் பராமரிக்கப்படும் 1.49 இலட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, ரூ.1.90 கோடி திட்ட மதிப்பீட்டில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க கிருமி நாசினி கலந்த நீர், மொத்தம் 91 கருவிகள் மூலமும், தெளிப்பான்கள் மூலமும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள படிக்கட்டுகள், தாழ்வாரப்பகுதி, 10அடி உயரத்திற்கு வெளிப்புறப் பகுதிகள் மற்றும் இதர பொது பகுதிகளில் 21.03.2020 அன்று முதல் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 ஜெட்ராடிங் இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி திரவம் திட்டப்பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களிலும் தெளிக்கப்படுகிறது. மேற்படி பணிகள் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் தினமும் தொடர்ந்து செம்மையாக நடைபெற்று வருகின்றன.


மேலும், கொரோனா தனிமைப்படுத்துதல் மையம் கண்டறியும் குழுவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் பிற துறை அலுவலர்களுடன் சேர்ந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.


கொரோனா தொற்று தடுப்புப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி தினமும் மேற்கொள்ளுமாறு துணை முதலமைச்சர் அவர்கள் உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.